பக்கங்கள்

புதன், 21 செப்டம்பர், 2011

பொங்குதமிழ் பாடல் 2011 – “ஈழத்தலைவன் திரும்பி வரும் காலத்திலே; நீ இருக்க வேண்டும் எரிமலையின் கோலத்திலே” (முழுமையான பாடல் இணைப்பு – video)


“வாட வாட புலிய வாட இடியும் புயலும் தாங்கி வாட” வாட வாட புலிய வாட எதிரி உயிரை வாங்கி வாட” “தாயகத்து மண்ணில் தாண்டா விடுதலைப் போர் இருக்கு; தரைப்படையும், கடல்ப்படையும், வான்படையும் பெருக்கு” என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

பாரிசு நகரில் நடைபெற உள்ள 11 ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டினையொட்டி கி. வீரமணி வாழ்த்துச் செய்தி


பிரன்சு நாட்டின் பாரிசு நகரில் நடைபெற உள்ள 11 ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டினையொட்டி சிறப்பு மலர் வெளியிடுவது அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வடபகுதியில் 400 தொல்பொருள் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது?


வடபகுதியில் தொல்பொருள்கள் இருக்கலாம் என நம்பப்படும் 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளபட்ட ஆராய்ச்சிகளின் போது இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாக தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
இதுவரை கண்டறியப்படாத பல தொல்பொருட்கள் இந்தப் பிரதேசத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது இந்த இடங்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசங்கள் தொல் பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு சட்ட ரீதியான முறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கையை இடைநிறுத்த அவுஸ்திரேலியாவில் பிரயத்தனம்


பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய கிரீன் கட்சி  கோரிக்கை விடுத்துள்ளது. 
இது தொடர்பில் இன்று முதல் பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கும் அது திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை இலங்கை நடத்தும் வரை இந்த தடைவிதிக்கப்பட வேண்டும் என்பதே கிரீன் கட்சியின் கோரிக்கையாகும்.
மனித உரிமை நிறுவனங்கள், மற்றும் அறங்கூறுநர் ஆகியோர், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சாட்சியங்களை திரட்டி இந்த இடைக்கால தடையை கோருவது என்று நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கனேடிய பிரதமரும் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் கூட்டத்தை போர்க்குற்றச்சாட்டு விசாரணையின்மையை காரணம் காட்டி பகிஸ்கரிக்கப் போவதாக எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில் அடுத்த மாதம் பொதுநலவாய தலைவர்களின் கூட்டம், அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.
கிரீன் செனட்டர், (Lee Rhiannon) லீ ரிஹானொன், தமது எதிர்ப்பு தொடர்பில் கருத்துரைக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு சர்வதேச அழுத்தம் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் உறுப்புரிமையில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு அவுஸ்திரேலியாவின் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் தாம் மேற்கொள்ளும் பிரசாரங்களின் போது அவுஸ்திரேலிய பொதுமக்களின் கருத்துக் கணிப்பிலும், சாசன பரீட்சையிலும் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டால், பேர்த்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்துக்கு இலங்கை பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்படுவதை தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன் கட்சியினர் ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி செனட்டில் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
கனடாவும் பொதுநலவாய நாடுகளில் இலங்கையை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருப்பதாக லீ ரிஹானொன், குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச ஜூரிமார் சம்மேளனத்தின் அவுஸ்திரேலிய உறுப்பினர் ஜோன் டௌவ்ட், இது தொடர்பில் குறிப்பிடுகையில், போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக கூறப்பட்டு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது இலங்கை.
இந்தநிலையில் அது உரிய விசாரணைகளை நடத்தாவிட்டால், அதற்கு மறுப்பு தெரிவித்தால், பொதுநலவாய நாடுகளின் அமையம் எவ்வாறு குற்றவாளி நாடு ஒன்றை தமது அங்கத்தவராக கொண்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரும் தமிழிழீ விடுதலைப்புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு குற்றம் சுமத்தி விசாரணைகளுக்கான பரிந்துரைகளையும் செய்துள்ளமையை கிரீன் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே 1999 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டமையை அடுத்து பாகிஸ்தான், பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து தடை செய்யப்பட்டது.
பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னரே அந்த நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், பிஜியும், 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது

திங்கள், 19 செப்டம்பர், 2011

நோர்வே உள்ளூராட்சித் தேர்தல்களில் 11 இலங்கைத் தமிழர்கள் தெரிவு!


நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல் இம்மாதம் 11, 12 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர்.
ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வெவ்வேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தொழிற்கட்சி சார்பில் ஓஸ்லோ நகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட ஹம்சாயினி குணரட்ணம் தெரிவாகியுள்ளார்.
ஒஸ்லோ தொகுதியின் குறூறூட் உள்ளூராட்சி அவைக்குப் போட்டியிட்ட, சோசலிச இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த புலேந்திரன் கனகரட்ணம், அதே தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிஸ்கந்தராஜா தர்மலிங்கம் - ஸ்தொவ்னர் உள்ளூராட்சி அவைக்கு தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, ரம்யா ஆறுமுகம் ஆகியோர் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ளனர்.
ஒஸ்லோவிற்கு அண்மையில் அமைந்துள்ய லோறன்ஸ்கூ நகரசபை வேட்பாளராக தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட திலகவதி சண்முகநாதன் தெரிவாகியுள்ளார்.
றோகலாண்ட் மாவட்ட அவைத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஜேசுதாசன் அலோசியஸ், பேர்கன் நகரசபை வேட்பாளர்களாக வலதுசாரிக்கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தூர்வாசன் சிங்காரவேல், சோசலிச இடதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட்ட குபேரன் துரைராஜா மற்றும் ஓலசுண்ட் நகரசபைக்கு வலதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீபன் புஸ்பராஜா ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
இவர்களில் ஹம்சாயினி குணரட்ணம், புலேந்திரன் கனகரட்ணம், சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, திலகவதி சண்முகநாதன் ஆகியோர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாக முதன்முறை தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்முறைத் தேர்தலில் இரண்டாவது தடவையாக இந்த ஐவரும் மீள்தெரிவாகியுள்ளனர்.
முதன்முறையாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்கள் பெருமளவில் விருப்புவாக்குகள் அளித்தமை முக்கிய காரணியென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நோர்வே நாட்டில் 2 தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கொரு முறை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடாத்தப்படுகின்றன.
இறுதியாக செப்ரெம்பர் மாதம் 2009ம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2005 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக தொழிற்கட்சி, சோசலிச இடதுசாரிக்கட்சி மற்றும் மத்திய கட்சி ஆகியன இணைந்த இடதுசாரிக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோர்வே நாடாளுமன்றம் 169 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2007ம் ஆண்டு நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றது. நோர்வேயில் 434 மாநகர சபைகளும் அவற்றின் கீழ் உள்ளூராட்சி சபைகளும் உள்ளன.
இன்னொரு வகையில் சொல்வதென்றால் 2 ஆண்டுகளுக்கொரு முறை நோர்வே மக்கள் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர் எனலாம்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விடுதலைவீச்சு நிகழ்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்டும் வகையில் புதிதாக இணைந்துள்ள அரசவை உறுப்பினர்களது அறிமுக நிகழ்வாக விடுதலைவீச்செனும் மக்கள் அரங்கம் பொதுநிகழ்வு ஜேர்மனியில் ஏற்பாடாகியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்றுள்ளனர். அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதிய அரசவை உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகளின் அறிமுகஅரங்கம் ஜேர்மனியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17-09-2011) மதியம் 14:00 மணிக்கு Gartenverein NORA , Eberstr 46 , 44145 Dortmund இடத்தில் நிகழ்வு இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன், பிரதிஅவைத் தலைவர் சுகன்யா புத்திசிகாமணி, அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர், தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன், நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா, கல்வி கலாச்சார சுகாதாரத்துறை துணை அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன், அமைச்சரவைச் செயலர் முருகையா சுகிந்தன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கெடுக்கின்றனர். புதிய அரசவை உறுப்பினர்களது விபரம் : கனடா : நிமல் விநாயகமூர்த்தி வின் மாகாலிங்கம் ஜெயபாலன் அழகரட்ணம் சிறிசங்கர் சின்னராஜா கென்றி கிருபைராஜா தனபாலன் மார்க்கண்டு
டென்மார்க் : இளையராஜ் கண்ணன் சிதம்பரநாதன் ஜேர்மனி : வாசுகி தனகராஜா சுப்பிரமணியம் பரமானந்தன் தணிகா சுப்பிரமணியம் பிரியதர்சினி மனோகரன் நோர்வே : தோமஸ் அலோசியஸ் பிரித்தானியா : மணிவண்னன் பத்மநாபன் நிமலன் சீவரட்ணம் சொக்கலிங்கம் யோகலிங்கம் சிவயூசம் சுகுமார்

அவுஸ்திரேலியாவில் நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் ரோபோக்கள்

அவுஸ்திரேலிய மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு பரிமாற உள்ளன. 
அவுஸ்திரேலியாவில் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கடந்த 2008ம் ஆண்டு கார்லிங் கமிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான சத்தான உணவு வகைகளை வழங்க மருத்துவமனை நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.
அதை தொடர்ந்து சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் என்ற ஒரு தனியார் மருத்துவமனை சத்தான உணவுகளை எந்திர மனிதன் என்றழைக்கப்படும் ரோபோக்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது.
அதற்கான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் கணணி மயமாக்கப்பட்டு அதில் அவற்றின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்த ரோபோக்கள் கணணி டிராலியின் மூலம் மருத்துவமனை முழுவதும் வலம் வரும். நோயாளிகளுக்கு தேவையான உணவு வகைகள்,  ஆடைகள் மற்ற பொருட்களை வழங்கும். இவை நடமாடும் வழித்தடங்களும் கணணியில் பதிவு செய்யப்படும். அதன்படி அவை செயல்படும்.
நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு வழங்கும் செயல்பாடு அடுத்த ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் என ராயல் நார்த் ஷோர் மருத்துவமனை அறிவித்துள்ளது

பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை நடத்தும் எம்.ஜி.ஆர். விழா!

பிரான்ஸ் - 16-Sep-2011 பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை நடத்தும் ‘எம்.ஜி.ஆர். விழா 2011’ பிரான்ஸ் நாட்டிலுள்ள எம்.ஜி.ஆர். பேரவை என்ற அமைப்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் எம்.ஜி.ஆருக்காக விழா எழுக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து முக்கிய பிரமுகர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து,பல்வேறு அம்சங்களுடன் நிகழ்ச்சிகளை அமைத்து ஒரு நாள் முழுவதும் விழா நடத்துகிறார்கள். இலக்கிய சொற்பொழிவு, இசை, நாட்டியம் என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் உண்டு. எம்.ஜி.ஆர்., பற்றிய சிறப்பு தபால் தலையும் ஆண்டு தோறும் வெளியிடுகிறார்கள். இந்த ஆண்டு வரும் 17 செப்டெம்பர்,2011- சனிக்கிழமையன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். விழாவில் திரைப்பட நடிகர் மயில்சாமி, 'இதயக்கனி' ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். 'இதயக்கனி' விஜயனின் எம்.ஜி.ஆர். புகைப்படக் கண்காட்சியும் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது. இந்த விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள் திருமதி.காயத்ரி கிஷோர்குமார், எம்.எஸ்.கன்யால், பிரான்ஸ் தமிழ் சங்கத் தலைவர் பா.தசரதன், பிரான்ஸிலுள்ள பாரீஸ் நகர செயின்ட் தெனிஸ் மேயர் திதியே பயார்டு, மற்றும் பிரான்சுவா கிளாத், திருமதி. புளோரன்ஸ் ஹேய், திருமதி. ஜாக்குலின் பவுலா ஆகிய துணை மேயர்களும் பங்கேற்கிறார்கள். அழைப்பிதழ்: www.facebook.com

வியாழன், 15 செப்டம்பர், 2011

வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்: ஆய்வாளர் தகவல்

மின்சாரத்தின் பயன் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மின்சாரத்தின் உபயோகம் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் கிரைண்டர் மிக்சிகள் ஆனது போல் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கனரக எந்திரங்கள் மூலம் இயங்கும் தொழிற்சாலைகள் வரை மின்சாரத்தை நம்பித்தான் உள்ளன. அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களும் மின்சாரத்தை நம்பியே இருக்கும் நிலையில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி இருக்கிறது. மின்சார தட்டுப்பாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறு மாற்று திட்டங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு ஆர்வம் காட்டி வருகின்றன. அணு மின்சக்தி, தண்ணீர், கடல் அலை, காற்று மற்றும் எரிவாயு போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை பயன்படுத்தி மின்சார தட்டுப்பாட்டை போக்கி வருகின்றனர். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். அழுகும் நிலையில் இருக்கும் வாழைப்பழம் மற்றும் விற்பனைக்கு லாயக்கு இல்லை என்று கழிக்கப்படும் சிறிய வாழைப்பழங்கள் போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அவுஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். அவுஸ்திரேலிய நாட்டின் வாழைப்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அணுகி எங்களிடம் ஆண்டுதோறும் ஏராளமான அளவு வாழைப்பழங்கள் அழுகிப் போகின்றன. மேலும் விற்பனைக்கு பயன்படாத நிலையில் உள்ள வாழைப்பழங்களும் வீணாக தெருக்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வீசப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி ஏதாவது நல்லது செய்ய முடிந்தால் பாருங்கள் என்று கூறினார்கள். இதை மனதில் கொண்டு பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் வீணாகப் போகும் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கினார்கள். அப்போதுதான் வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தனர். இதற்காக ஆய்வுக்கூடத்தில் பெரிய தொட்டி ஒன்றை அமைத்தனர். இதில் வாழைப் பழங்களை போட்டு காற்று புகுந்து விடாதபடி சீல்வைத்து மூடினார்கள். வாழைப்பழம் விரைந்து அழுக வேண்டும் என்பதற்காக சில வேதிப் பொருட்களும் அதனுடன் கலந்தனர். இதன் காரணமாக வாழைப்பழம் அழுகி அதில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவில் வெளிப்பட ஆரம்பித்தது. இந்த மீத்தேன் வாயு மூலம் ஜெனரேட்டர் ஒன்றை இயக்கி அதன்மூலம் மின்சாரம் தயாரித்து காட்டினார்கள். இந்த கண்டுபிடிப்பு குறித்து பில் கிளார்க் கூறும் போது, ஆய்வுக்கூடத்தில் எங்கள் பரிசோதனைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து பெரிய அளவில் தொழிற்சாலைகள் நிறுவி அதன் மூலம் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இந்தப்பணி சாதாரணமாக இருக்காது. இது சவால் நிறைந்த பணியாகும். காரணம் மற்ற மின்சாரம் தயாரிக்கும் முறையில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகும். வியாபாரிகளின் கணக்குப்படி ஆண்டு தோறும் சுமார் 20 ஆயிரம் டன்கள் எடை அளவு வாழைப் பழங்கள் குப்பைக்கு வருகிறது. இவை அனைத்தையும் சேகரித்து தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும். பின்னர் இவற்றை தரம் பிரித்து சுத்தம் செய்து பெரிய தொட்டிக்குள் போட வேண்டும். அதோடு அவை விரைவில் மக்கிப்போய் அழுக வேண்டும் என்பதற்காக உரிய வேதிப் பொருட்களையும் சேர்க்க வேண்டும். இந்தக் கலவை ஒருசில நாட்கள் அப்படியே இருக்கவேண்டும். அதன் பிறகு அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிப்படும். இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை இயக்கி அதன் மூலம் வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை இயக்கலாம். தற்போதைய கணக்குப்படி 60 கிலோ வாழைப்பழத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் ஒரு மின் விசிறியை 30 மணி நேரம் தொடர்ந்து ஓட வைக்க முடியும். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் விரிவடையும்போது அதிக அளவு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறி இருக்கிறார் ஆராய்ச்சியாளர் பில் கிளார்க்

இலங்கையில் 10வீதமானவர்களுக்கு மனநோய்

  
இலங்கையில் மனநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி தேசிய மன ஆரோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வசிக்கும் மக்களில் 10வீதமானவர்களுக்கு மனநோய் இருப்பதாகவும், இரண்டு வீதமானவர்களுக்கு அதிதீவிர மனநோய் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சுனாமி பாதிப்பினால் அதிகமானவர்கள் மன அழுத்தத்திற்கும் மனநோய்க்கும் உள்ளாகியிருப்பதாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய மன ஆரோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளியில் சாதாரணமாக நடமாடினாலும் பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிகிச்சையும் ஆலோசனையும் பெறுவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும் என்றும் தேசிய மன ஆரோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சையின் மூலம் குணமடையலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நோய்க்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்காக உளவியல் ஆதரவுக்கான தேசிய சபை மற்றும் சுமித்ராயோ போன்றவற்றை நாட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

GTV வெளிச்சம் நிகழ்சியில் தெரிந்த ஒளிவட்டம் !


கடந்த 2 தினங்களுக்கு முன்னர் GTV யில் நடந்த வெளிச்சம் என்னும் நிகழ்ச்சியில் பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை தாமே நடத்துவோம் என விடாப்பிடியாக உள்ள 2 மனிதர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாம் மக்களை தெளிவுபடுத்துவதாகக் கூறி மேலும் குழப்பிவிட்டுச் சென்றுள்ளனர். பிரித்தானியாவில் சுமார் 1990ம் ஆண்டு முதலே மாவீரர் தினம் சிறிய அளவில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் மக்கள் வரவு அதிகரிக்க அது ஒரு மாபெரும் நிகழ்வாக உருவெடுத்துள்ளது. அதனை ஆண்டாண்டு காலமாக நடத்திவரும் செயல்பாட்டாளர்களைப் புறந்தள்ளிவிட்டு புதிய கோஷ்டி ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது தாமே மாவீரர் தினத்தை நடத்துவோம் என அவர்கள் போட்டி போட்டுக் கிளம்பியுள்ளனர்.

உடனடியாகவே அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது ஜி.ரிவி. இத் தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சியில் தோன்றிய இத் திடீர் குழுவினர் தாம் மாவீரர் தினத்துக்காக அடித்து வைத்திருருக்கும் 20, 50, மற்றும் 100 பவுன்சுகளுக்கான டிக்கெட்டுக்களையும் காட்டி மக்களை பணம் தந்து உதவுமாறும் அழைப்புவிடுக்கின்றனர். முன்னதாக BTF இல் பணியாற்றி பின்னர் அங்கிருந்து GTFக்கு தாவி அதன் பின்னர் தாம் எங்கே நிற்கிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாத சுகந்தன் என்பர் தொலைக்காட்சியில் தோன்றி தாமே மாவீரர் தினத்தை நடத்துவதாகச் சொல்கிறார். அதாவது மாவீரர் தினத்தை நடத்தினால் மக்கள் மத்தியில் பிரபல்யமாகலாம் என்பது இக் குழுவின் நினைப்பு. அதுமட்டுமல்லாது மாவீரர் தினத்தை பொருளாதார நோக்குடன் நடாத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சரி விடையத்துக்கு வருவோம் ! தொலைக்காட்சியில் முதல் பாதி நிகழ்ச்சி முடிந்து பின்னர் கேள்விநேரம் ஆரம்பமானது. அப்போது ஜேர்மனியில் இருந்து தொலைபேசியூடாக இணைந்த தமிழர் ஒருவர் மாவீரர் தினத்துக்கான அர்த்தம் என்ன ? தேசிய தலைவரால் அதற்கு கொடுக்கப்பட்ட வரை முறை என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூற முடியாது சுகந்தன் திண்டாட ஒருவகையாக நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் திரு.தினேஷ் அவர்கள் அதனைச் சமாளித்துச் சென்றார். பின்னர் அதிர்வின் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சுகந்தன் பதில் கூறுகையில் இது நல்லதொரு கேள்வி என ஆரம்பித்து, பின்னர் போகப் போக ஊடகவியலாளரைத் திட்டித் தீர்த்தார். இப்படியான "கீழ் தரமான" கேள்விகளைக் கேட்கக்கூடாது என்று அநாகரீகமான முறையில் அவர் பதில் வழங்கியது ஒட்டுமொத்த தமிழ் ஊடகவியலாளர்களையும் அவமதிக்கு செயலாக அமைந்துள்ளது.

மக்கள் ஆனாலும் சரி ஒரு ஊடகவியலாளர் ஆனாலும் சரி கேள்வி கேட்டால் அதற்கு பதில் வழங்கித் தானே ஆகவேண்டும். அதற்குச் சம்மதித்துத் தானே நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றினீர்கள் ? மக்களுக்கு சேவை செய்கிறேன் காசு கொடுத்தேன் என்று எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பிதற்றலாம் ஆனால் மக்கள் கேள்விகேட்டால் மட்டும் பிடிக்காது என்றால் இது எந்த ஊர் ஞாயம் ? சரி நிகழ்ச்சிக்கு வந்தவர் தான் இப்படிப் பேசுகிறார் என்றால் இதனைக் வழிநடத்தும் அறிவிப்பாளர் கூட இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது பெரும் வருத்தத்துக்குரிய விடையமாகும். இங்கே படத்தில் இருப்பவர் தான் சுகந்தன். தன்னிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பவர். கேட்டால் அது கீழ் தரமான கேள்வியாக மாறிவிடுமாம்.

வெளிச்சம் நிகழ்ச்சியில் வந்ததால் தன் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரிவதாக இவர் நினைக்கிறார் போலும். இதற்கு காலம் பதில் செல்லும் ! தமிழ் மக்கள் பதில் சொல்வார்கள் !




சிறுவர்களை தற்கொலை தாக்குதல்தாரிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக உலகம் அணிதிரள வேண்டும்


சிறுவர்களை ஆயுதப்படைகளில் சேர்த்து அவர்களை தற்கொலை போராளிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்தகைய அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐ.நா.செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பேசும் போது தெரிவித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அழைப்பு சிறுவர்களை கடத்திச்சென்று படையில் சேர்த்ததாகவும், இதனால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள் என குறிப்பிட்ட அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று அரசாங்க படைகளுடன் சேர்ந்தியங்கிய  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் சிறுவர்களை கடத்திச்சென்று படைக்கு சேர்த்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாடுகள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி சிறுவர்களை கைது செய்து தடுப்புக்காவலில் வைப்பது அதிகரித்து வருகின்றது. மோதல்களில் ஈடுபட்டார்கள் அல்லது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அதற்குக்காரணம் கூறப்படுகின்றது. இது கவலை தருகின்றது. அவர்களுடைய சுதந்திரத்தை பறிக்கும்போது அது மனித உரிமை மீறல்கள் ஆகும் என அவர் தெரிவித்தார். தேசிய மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் சிறுவர்கள் மீது குற்றஞ்சாட்டும்போது
அவர்களுக்கு சட்ட உதவி ஏற்பாடு செய்து கொடுக்கப்படுவது கிடையாது. பெற்றார்கள் சிறுவர்களுடன் வருவது கிடையாது. அச்சிறுவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டு பற்றிய விவரம் எதுவும் தெரியாத நிலையில் உள்ளனர்.
ஆயுதக்குழுக்களுடன் அவர்கள் பலவந்தமாக சேர்க்கப்பட்டார்கள் என்ற அடிப்படைக்காரணங்களை பார்க்கும் போதும் அவர்களின் வயது குறித்தும் கவனம் எடுக்க வேண்டும். ஆதலால் அச்சிறுவர்களை பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்க்க வேண்டுமே
தவிர குற்றம் புரிந்தவர்களாகக் கருதக்கூடாது. அச்சிறுவர்களை பலவந்தமாக திரட்டுபவர்கள் மீது குற்றஞ்சாட்டவேண்டும். ஆயுதக்குழுக்களுடன் அச்சிறுவர்கள் இருக்கும்போது அவர்கள் தங்களுடைய தளபதிகளால் அடித்து துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றார்கள்.
விமானத்தாக்குதலில் சிவிலியன் மக்களுடன் சிறுவர்கள் கொல்லப்படுகின்றார்கள்.
அது பேரழிவைக் கொண்டு வருகிறது. யுத்தத்தின்போது சிவிலியன்கள் இழப்பை வெகுவாக்ககுறைக்க வேண்டும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதை நிறுத்த வேண்டும். இவை நவீன யுத்தகாலத்தில் தெரிந்தே செய்கின்ற தவறு ஆகும். இவ்வாறான நடவடிக்கைளுக்கு எதிராக உலகம் ஒன்றாக ஐக்கியப்பட்டு செயல்படவேண்டும் என ராதிகா குமாரசாமி தெரிவித்தார்.

புத்தக பிரியர்களுக்கான இணையதளம்


இசைக்காக ஸ்பாட்டிபை செய்ததை இலக்கியத்திற்காக செய்ய வந்திருக்கிறது என்னும் வரணனையோடு அறிமுகமாகியிருக்கிறது 24 சிம்பல்ஸ் இணையதளம்.
இலக்கியத்திற்கான ஸ்பாட்டிபை என்றும் சொல்லப்படக்கூடிய இந்த தளம் ஸ்பாட்டிபை எப்படி பாடல்களை கேட்டு ரசிக்க உதவுகிறதோ அதே போல புத்தகங்களை படிக்க உதவுகிறது.
புத்தகங்களை படிக்க உதவும் இணையதளங்கள் ஏற்கனவே ஏராளமாக உள்ள நிலையில் இதில் என்ன புதுமை இருக்கிறது என கேட்கலாம். இந்த தளத்தில் புத்தகங்களை தரவிறக்கம் செய்யாமலேயே படிக்கலாம் என்பதே விஷயம்.
பொதுவாக இணையத்தில் புத்தகங்களை இபுக் வடிவிலோ அல்லது பிடிஎப் உள்ளிட்ட கோப்பு வடிவிலோ தான் படிக்க முடியும். அநேகமாக அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தரவிறக்கம் செய்யாமல் புத்தகங்களை படிப்பது மிகவும் கடினம். தரவிறக்கம் செய்வது என்பது சில நேரங்களில் புத்தகங்களை வாங்குவதையும் குறிக்கும். அதிலும் குறிப்பாக புதிய புத்தகங்கள் மற்றும் காப்புரிமை சிக்கல் உள்ள புத்தகங்களை அதற்குறிய கட்டணம் செலுத்தியே இபுக் வடிவில் பெற வேண்டும்.
இணையத்தில் இலவசமாக படிக்க கிடைப்பவை பெரும்பாலும் காப்புரிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட புத்தகங்களே. புதிய புத்தகங்கள் சுடச்சுட தேவை என்றால் வாங்குவதை தவிர வேறு வழியில்லை.
ஆனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் இன்னும் புதிய புத்தகங்களை இபுக் வடிவில் வெளியிட விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இபுக் அச்சு வடிவிலான விற்பனையை பாதிக்கும் என்றும் காசு கொடுக்க மனமில்லாத இலவச வாசிப்பை ஊக்குவிக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். அதோடு காப்புரிமை சிக்கலும் இருக்கிறது.
இசை துறையிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. சொல்லப்போனால் இசை துறையில் தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே பெரும் போரே நடந்தது. புதிய பாடல்களை சீடியில் வாங்குவதை விட இணையம் வழியே தரவிறக்கம் செய்து கொண்டு தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்ததால் விற்பனையும் வருவாயும் பாதிக்கப்பட்ட நிலையில் இசை தயாரிப்பு நிறுவனங்கள் அவர்கள் மிது காப்புரிமை போர் தொடுத்தது.
அனுமதி இல்லாமல் பாடல்களை தரவிறக்கம் செய்வது சட்ட விரோதமாக கருத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. இந்த போர் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தரவிறக்க யுகம் இசை தயாரிப்பு நிறுவனங்களை இல்லாமல் செய்துவிடும் என்பதால் தொழில்நுட்பம் ரசிகர்களுக்கு திறந்து விட்ட வாயில்களுக்கு பூட்டு போடுவதில் மும்முரமாக இருக்கின்றன.
இதனிடையே ஐடியூன்ஸ் அறிமுகமானது. காப்புரிமை சிக்கல் இல்லாமல் புதிய பாடல்களை கட்டணத்திற்கு தரவிறக்கம் செய்து கொள்ள ஆப்பிளின் இந்த சேவை வழி செய்தது. இதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
இந்த நிலையில் தான் ஸ்வீடனில் இருந்து ஸ்பாட்டிபை உதயமானது. இந்த தளம் சந்தா அடிப்படையில் புதிய பாடல்களை தரவிறக்கம் செய்யாமலேயே கேட்டு ரசிக்க வழி செய்தது.
அதாவது இந்த தளம் பாடல்களை ஸ்டிடிமிங் முறையில் ஒலிபரப்பி கொண்டே இருக்கும். உறுப்பினர்கள் அதனை இணையத்தில் கேட்டு மகிழலாம். தரவிறக்கம் செய்யவும் முடியாது. மற்றவர்களோடு பகிரவும் முடியாது. பாடல்களை கிளிக் செய்தால் அவரை ஒலிபரப்பாகும், கேட்டு ரசிக்கலாம்.
காப்புரிமை உள்ள பாடல்களை கூட ஸ்பாட்டிபை அனுமதி பெற்று இந்த தளத்தில் வழங்குகிறது. ஆனால் அதனை கேட்டு ரசிக்க விளம்பரங்களை பொருத்து கொள்ள வேண்டும். விளம்பரம் வேண்டாம் என்றால் கட்டண சேவைக்கு போக வேண்டும்.
ஸ்வீடனில் துவங்கி ஐரோப்பாவில் பிரபலமான இந்த சேவை சமீபத்தில் அமெரிக்காவிலும் அறிமுகமானது. ஸ்பாட்டிபை போலவே 24 சிம்பல்ஸ் புத்தகங்களை ஸ்டிரிமிங் செயது இணையத்திலேயே படிக்க உதவுகிறது.
புதிய புத்தகங்களை கூட இதன் முலம் இணையத்திலேயே படிக்கலாம். தரவிறக்கம் செய்து படிக்க முடியாது. இலவசமாக படிக்க வேண்டும் என்றால் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும் இல்லை என்றால் சிறப்பு கட்டண சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இபுக் சாதனங்களிலும் படிக்கும் வசதி உண்டு.
புதிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லாமல் அதெ நேரத்தில் காப்புரிமை பிரச்ச்னை இல்லாமல் படிக்க இந்த சேவை மிகவும் ஏற்றது. புத்தக பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
இப்போதைக்கு ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அதிலும் ஸ்பானிஷ் மொழி புத்தகங்களே அதிகம் உள்ளன. விரையில் மற்ற மொழிகளும் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் புத்தகங்களை அப்படியே இணையத்தில் இருந்தபடியே படிப்பதோடு அவற்றை பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
அதே போல நண்பர்கள் படித்து கொண்டிருக்கும் புத்தகத்தையும் பார்க்கலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தில் நாம் படித்த பகுதியில் விமர்சன குறிப்புகளை எழுதி அதையும் பகிர்ந்து கொள்ளலாம்.

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை! நிதுஷிகா 192 புள்ளிகள் பெற்று யாழில் முதலிடம்

ஐந்தாம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பெஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா என்ற மாணவி யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பில்  நிதுஷிகா தெரிவிக்கையில், தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோலாக அமைந்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

20 ஆண்டுகளாக தமிழ் பாடத்தில் சதம்: “மராத்திய’ ஆசிரியரின் சாதனை பயணம்

மராத்தியை தாய்மொழியாக கொண்ட ஆசிரியர் இந்திராபாய், கடந்த 20 ஆண்டுகளாக தன் மாணவர்களை தமிழ்ப் பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். கோடம்பாக்கம், புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியராக இருப்பவர் இந்திராபாய், 52, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், தன் மாணவர்களை, 20 ஆண்டுகளாக, 100க்கு 100 சதவீதம் பெற வைத்து, பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
தஞ்சாவூரை சொந்த ஊராக கொண்ட இந்திராபாயின் மூதாதையர்கள், சரபோஜி மன்னர் படை எடுத்து, தமிழகத்தை வென்ற போது இங்கு குடியேறினர். பின் அவருடைய ஆட்சிக் காலத்தில், மும்பையிலிருந்து வந்த பலர், தமிழகத்தில் நிரந்தரமாக தங்கினர். அவர்களில் இந்திராபாயின் குடும்பமும் அடக்கம். அப்பாவின் தமிழ் ஆர்வத்தால், பள்ளி நாட்களில் பேச்சு, கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு, மாவட்ட, மாநில அளவில் பரிசுகளை வென்றிருக்கிறார். பள்ளிப் படிப்பு முழுவதையும் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றவர், பின், எப்படியாவது தமிழ் படிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு, முதுகலை தமிழ் பாடத்தில், தங்கம் வென்றிருக்கிறார். “”எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்த உடன், என்னை போல் தமிழ் மொழியின் மீது ஆர்வமாக இருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்கள் மூலம் தமிழுக்கு சேவை செய்ய வேண்டும். அதுதான் என் முதல் கடமை என்று மனதிற்குள் சத்தியம் எடுத்துக் கொண்ட பிறகு தான், நான் வகுப்பறைக்குள்ளே சென்றேன்.
இப்போதும் தினமும் வகுப்பறைக்குள் செல்லும் போது, அந்த சத்தியத்தை மனதில் வைத்துக் கொண்டே நுழைவேன். இதில் இந்த நிமிடம் வரை நான் பின்வாங்கியதில்லை. என்னுடைய மாணவர்கள் இலக்கியம், சினிமா, அரசியல் என, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, நான் சிந்திய வியர்வை வீண் போகவில்லை என்ற திருப்தி கிடைக்கிறது” என்கிறார் தமிழாசிரியர் இந்திராபாய். இன்றைய காலக் கட்டத்தில் தமிழ் பாடம் எடுப்பவர்களை கண்டால் மாணவர்கள் பயந்தோடுகின்றனர். ஆனால் இந்திராபாய், இலக்கணத்தை கூட எளிய வகையில் புரியும்படி நடத்துகிறார். “”என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்வை விட, பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். அதனால் தான் என் கணவர் இறந்த ஒரு வாரத்தில் வகுப்புக்கு சென்றேன். எனக்குப் பின், என் பணியை, மாணவர்கள் யாரேனும் ஈடுபாட்டுடன் செய்தால் போதும். அதுவே மாணவர்களிடம் இருந்து பிரதிபலனாக எதிர்பார்க்கிறேன்” என்கிற இந்திராபாய், தன் தமிழ்ப் பணிக்காக பல்வேறு அமைப்புகளிடம் இருந்து விருது பெற்றுள்ளார்